தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் புதிய குழாய் களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர்.
உடனடியாக கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ வைக்கப்பட்டதால் போராட்டம் மேலும் வலுத்தது.
போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் கதிராமங்கலத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். முன்னதாக கதிரமங்கலம் சென்று ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு நடத்தினார்.