வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக துபாயைச் சேர்ந்த நிறுவனத்தின் இயக்குனரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யக்கூடிய 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை ரூ.3,600 கோடிக்கு இந்தியா வாங்கியது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு ரூ.463 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி உள்பட 21 பேர் மீது பணப்பரிமாற்ற தடுப்பு சட்டப்படி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. துபாயைச் சேர்ந்த நிறுவனத்தின் இயக்குனர் ஷிவானி சக்சேனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யு.எச்.ஒய். மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் செயல் இயக்குனர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (பி.எம்.எல்.ஏ. கோர்ட்) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 4 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் இரண்டாவது நபர் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு தில்லியை சேர்ந்த வர்த்தக பிரமுகர் கவுதம் கெய்தான் என்பவர் கைது செய்யப்பட்டார்.