பிரதமர் மோடிக்கு பூச்செண்டு வழங்கி வரவேற்பதை தவிர்க்குமாறு மத்திய உள்ளதுறை அமைச்சகம் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் அறிவித்ததாவது:
இந்தியாவின் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு.
அதாவது நம் பிரதமர் மோடி அவர்களுக்கு தங்கள் சார்பிலான வரவேற்பின் போது இனி வரும் காலங்களில் சால்வை, பூச்செண்டு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டாம்.
மாறாக ஒரு பூவுடன் கூடிய கதர் கைக்குட்டை அல்லது புத்தகம் வழங்கி கௌரவிக்கலாம். இது அனைவருக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது என்றிருந்தது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி பிரதமர் மோடி, பூச்செண்டுகளை தவிர்த்து புத்தகம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், புத்தக வாசிப்பு குறித்து அவர் கூறியதாவது:
ஒருவரின் பணிநிமித்தம் காரணமாக புத்தகம் வாசித்து அறிவை வளர்த்துக்கொள்வதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக்கூடாது. அதனாலேயே தனி மனிதனின் சமூக அக்கறை அதிகரிக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது இதன்மூலம் புரியவரும்.
நம் அறிவை வள்ர்த்துக்கொள்வதன் மூலம் சமூகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு விடிவு காண முடியும். சமூக சீர்கேடுகளை சரிசெய்ய முடியும். அமைதியைப் பரப்ப முடியும். இந்தியாவின் மரியாதையையும், தேச ஒருமைப்பாட்டையும் வளர்க்க முடியும்.
இந்த ஒரு சிறிய மாற்றம் நாளை பெரிய அளவிலான சாதனையாக மலரும் என்றார்.