புதுதில்லி: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்ற குழுக்கூட்டம் தொடங்கியது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், இந்த மாதம் 4-ம் தேதி தொடங்கி, நாளையுடன் முடிவடைகிறது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக, கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை முடிவடைவதால், இன்று பா.ஜ.க. உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் கூடி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார்.
யாரும் எதிர்பாராத வகையில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தை தேர்வு செய்ததுபோல, பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வுசெய்வார்கள் என கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.