புதுதில்லி: தில்லியில் இரண்டாவது நாளாக ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர்க் கடன் தள்ளுபடி, தேசிய நீர்வழிச் சாலையை உருவாக்குவது, 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அருகே ஞாயிற்றுக்கிழமை தர்னாவில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் சுமார் 100 பேரை தில்லி போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர்.
பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இந்நிலையில் இன்று தில்லியில் பலத்த மழை பெய்த போதிலும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழக விவசாயிகள் கொட்டும் மழையில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.