புதுதில்லி: பா.ஜ.கவின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மாலையில் நடைபெற்றது. இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 18 எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி வேட்பாளாராக கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்த வெங்கய்யா நாயுடு தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார். அப்போது இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்தார். இவரது பேச்சாற்றல் காரணமாக விரைவிலேயே பெரும் புகழை பெற்றார். 1972ல் நடைபெற்ற ஜெய் ஆந்திரா இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
1978 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உதயகிரி சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வெங்கையா நாயுடு ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். 1998, 2004 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலங்கள் அவை உறுப்பினராக பதவி வகித்தார்.
2002ல் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த போது தீவிர சுற்றுப் பயணம் செய்து கட்சியை வளர்த்தார். 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றபோதும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார்.