புதுதில்லி: குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
இதையொட்டி எதிர்க் கட்சிகளின் சார்பில் குடியரசுத் துணை தலைவராக நிறுத்தப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்க ஆளுநராக கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரையிலும் பதவி வகித்துள்ளார். அவரது மனைவியின் பெயர் தாரா காந்தி. 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.