திருவனந்தபுரம் : கேரளாவில் 51 வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்டை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கேரளாவின் நெய்யாட்டிங்காரா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எம்.எல்.ஏ. வின்சென்ட் தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை (வயது 51) விசாரித்த போலீசார், எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ. வின்சென்ட் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை தொலைபேசிமூலம் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் எம்.எல்.ஏ.வின் தொலைபேசி விவரங்களை பரிசோதித்த போலீசார் அவர் கடந்த சில மாதங்களாக அப்பெண்ணுடன் தொலைபேசியில் பேசி வந்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் சில ஆதாரங்களை சேகரித்த போலீசார், எம்.எல்.ஏ. வின்செட்டிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்டை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கேரளாவின் நெய்யாட்டிங்காரா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.