சீன துறைமுகம் தொடர்பான மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்துக்கு இலங்கை அதிபர் சிறீசேனா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய விதிகள் மூலம், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் துறைமுகம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்பந்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை செய்தி தொடர்பாளர் தயாசிறி ஜெயசேகரா கூறியுள்ளார்.
மாற்றியமைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சீனாவின் பங்களிப்புக்கு இலங்கை அரசு கடிவாளம் இட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் அம்பான்தோட்டா என்ற இடத்தில் சீனா ஒரு துறைமுகத்தை உருவாக்கி உள்ளது. இத்துறைமுகத்தையொட்டி 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தவும் முடிவாகி இருந்தது. மேலும் சீனா தன்னிடமுள்ள அணுசக்தி மற்றும் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவ்வப்போது இலங்கையில் நிறுத்துவது தொடர்கதையாக இருந்தது.
இந்தியா பலமுறை எச்சரித்தும் இலங்கை அதைப் பொருட்படுத்தியதே இல்லை. இந்நிலையில் கடந்த மே மாதம் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.