புதுதில்லி: குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தின்பிறகு நிருபர்களிடம் ஜே.பி.,நட்டா கூறுகையில், குஜராத் மாநிலத்தில் இருந்து அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிடுவார் என்றார்.
மேலும் உள்ளூர் தலைவர்களிடம் இதுகுறித்து கருத்து கேட்பு நடந்து வருவதாகவும் நட்டா தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
அமித்ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஸ்மிருதி இரானி ஏற்கனவே குஜராத்திலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.