சென்னை : சட்டப் பேரவையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா, எம்.எல்.ஏ.க்கள் பண பேரம் பற்றி எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது கண்டத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதச்சார்புடைய, வகுப்பு வாத அரசியலை எதிர்த்து மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் ராகுல். குற்றவாளிகள் பதவிகளில் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கியவரும் அவர் தான். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த அரசு மீது ஆளுநரிடம் புகார் செய்துள்ளன. அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.
அ.தி.மு.க.வை உடைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் பா.ஜனதா வைத்துள்ளது. இப்போது இந்த ஆட்சியை காப்பாற்ற பா.ஜனதாவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?
எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். முதலில் அவர் அரசியலுக்கு வந்து கொள்கைகள், தனித்து நிற்கிறாரா? என்பதை அறிந்த பிறகே எதுவும் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.