சென்னை: எம்.எல்.ஏ.க்கள் விலைபேசப்பட்ட விவகாரத்தில் சட்டப் பேரவை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன், எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று வெளியானது. இதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, கோரியிருந்தார். மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி எம்.எல்.ஏ.க்கள் விலைபேசப்பட்ட விவகாரத்தில் சட்டப்பேரவை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.