பெய்ஜிங்: சர்வதேச யோகா தினம் புதன்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தில்லியிலுள்ள கனாட் பிளேஸ் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர்.
இந்நிலையில் சீனாவில் சர்வதேச யோகா தினத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சீன பெருஞ்சுவர், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்களில் யோகா சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
சீன பெருஞ்சுவரில் மாபெரும் யோகா தின விழா இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் 12 நகரங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளில் சுமார் 20,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, சீனா மட்டுமின்றி ஜப்பான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து கியூபா உள்ளிட்ட நாடுகளில் யோகா தினம் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. அமெரிக்காவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகம் யோகா தினத்தை குறிக்கும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிரான்ஸ், அமெரிக்காவின் வாஷிங்டன், ஹங்கேரி, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் யோகா தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.