சென்னை: போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலாளர், டிஜிபி, போக்குவரத்து செயலாளர் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள போக்குவரத்து ஆணையர், உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழு அறிவுறுத்தலின் படி, சாலை விபத்துகளை தடுக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். வாகன உரிமம் இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லுதல், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணிப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
மேலும் வாகன ஓட்டுநர், அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.