இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத் தடை விதித்த டிரம்ப் அரசின் ஆணைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்கான விசா வழங்குதலை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும், சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்பதை காலவரையறை இன்றி தடை செய்தும் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவுக்கு விர்ஜினியா மாகாணம், ரிச்மண்டில் உள்ள 5 மாகாணங்களுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அதிபரின் உத்தரவை மட்டும் கருத்தில் கொண்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு தனது மனுவில் அரசு குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் அளிக்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரத் திட்டமிடுபவர்களைக் கடுமையான சோதனைக்குப் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூற அதிபருக்கு அதிகாரம் உண்டு என்று நீதித் துறை செய்தித் தொடர்பாளர் சாரா இஸ்குர் ஃபுளோரஸ் தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் அரசு இந்த ஆணையை அமல்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும் டிரம்ப் உத்தரவு குறித்து அக்டோபரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் கடந்த வாரம் நீதிமன்றம் அனுமதித்தால் அடுத்த 72 மணி நேரத்தில் தடை அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார்.