அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்க உள்ளது. இது தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும். இந்த யாத்திரைக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆண்டு முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யாத பக்தர்களும் அமர்நாத் யாத்திரைக்கு வருவதால், இந்த ஆண்டு 2 முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்த யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கி எழுதப்பட்ட கடிதம் அனைத்து தலைமை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் அந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது.
யாத்திரைக்கு வரும் வாகனங்களை தீக்கிரையாக்க தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் ஏற்படும் பதற்றத்தை கொண்டு நாடு முழுவதும் மோதல்களை ஏற்படுத்தவும் திட்டம் தீட்டியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.