எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார், குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தில்லிய்ஹில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: - நான் மக்களவை சபாநாயகராக இருந்த போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நான் வேலை செய்யும் முறையை பாராட்டினர்.
நான் ஒரு சார்பாக செயல்படுகிறேன் என்று யாரும் குற்றம்சாட்டியதில்லை. ஜனநாயக மதிப்புகள், வெளிப்படைத் தன்மை, வறுமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட அரசியல் கோட்பாடுகளை முன் வைத்தே தேர்தலை சந்திக்கிறோம் என்று கூறினார்.
மேலும் பிகார் முதல்வரின் நிலைப்பாடு குறித்து கேட்ட போது அவரிடம் பேசி ஆதரவை பெற முயற்சிப்போம் அரசியலில் இது ஒன்றும் புதிதல்ல என்று கூறினார்.
இந்நிலையில் நாளை ஜூன் 28-ஆம் தேதி அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.