சென்னை: சிலைக் கடத்தல் கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகளை போலீசாரே விற்பனை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தலில் தற்போது பணியில் உள்ள காவலர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றற காவலர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் பணியின் போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர் பாஷா , சுப்புராஜ் ஆகியோர் சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலைகளை விற்று பணம் பெற்ற வழக்கில் தொடர்புடைய காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். எனவே, இவர்கள் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஜூன் 29ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.