புதுச்சேரியிலுள்ள சென்டாக் அலுவலகத்தில் 7 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக எம்பிபிஎஸ், மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகள் சேர்க்கையில் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பெருந்தொகை ஊழல், முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கடந்த மே 30-ம் தேதி ஆளுநர் கிரண்பேடி சென்டாக் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டார். பின்னர் இதுதொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சிபிஐக்கு அனுப்பப்பட்டது. எனவே மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடுகள் புகார்கள் எதிரொலியாக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், சென்டாக் செயல்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் செயலகம் பரிந்துரைத்தது.
அதன் எதிரொலியாக சென்னையில் இருந்து 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சென்டாக் அலுவலகத்துக்கு வந்தது. அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான ஆவணவங்களை ஆய்வு செய்தனர். இரவு 7.10 மணி வரை சோதனை நீடித்தது. பின்னர் 2 பெட்டிகள் முழுவதும் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் தங்கள் வசம் கொண்டு சென்றனர்.