திருவண்ணாமலை அருகே கோழிக் கழிவுகளைக் கொட்டியதால் நிறம் மாறிய ஏரித் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த வாணாபுரத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. மழைக் காலங்களில் நிரம்பும் ஏரித் தண்ணீரை விவசாயத்துக்கும், குடிக்கவும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த ஏரியில் மீன் வளர்க்க பொதுப் பணித் துறை மூலம் ஏலம் விடப்படும்.
இந்நிலையில், கடந்த மாதம் 12-ஆம் தேதி சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் வரத்தால் வானாபுரம் ஏரி நிரம்பியது.
இதையடுத்து, ஏரியில் மீன் வளர்க்க பொதுப் பணித் துறை மூலம் ஏலம் விட்டது. ஏலம் எடுத்தவர்கள் மீன் வளர்க்கத் தொடங்கினர். மீன் குஞ்சுகள் வளரத் தேவையான கோழி கழிவுகளை ஏலம் எடுத்தவர்கள் ஏரியில் கொட்டியதாகத் தெரிகிறது. இதனால், தண்ணீரின் நிறம் கருப்பாக மாறியது.
நிறம் மாறிய தண்ணீரில் இருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. இதனால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
கால்நடைகளும் இந்தத் தண்ணீரைக் குடிக்கவில்லையாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியைச் சுத்தப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.