மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருந்தால், அது குறித்து விசாரணை ஆணையம் அமைப்பது மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், -உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்- என, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.ஏ. ஜோசப் என்பவர் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, -தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், மறைந்த முதல்வர் மரணம் குறித்த உண்மையை வெளிக் கொண்டு வர அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டுமா -என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதேபோன்று, நாகை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஏற்கெனவே, இந்த வழக்குகளுக்கு, தமிழக அரசும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் பதில் மனு தாக்கல் செய்து விட்டன.
இந்த நிலையில், இந்த வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை செயலாளர் எஸ்.மணிராம் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த கூறியிருப்பதாவது:
அரசியல் அமைப்பு சட்டம், 7-வது அட்டவணையின்படி மருத்துவம், சுகாதாரம், சட்ட-ஒழுங்கு ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. எனவே, குற்றச் சம்பவத்தை தடுப்பது, கண்டு பிடிப்பது, வழக்குப்பதிவு செய்வது, புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தருவது ஆகியவை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
மேலும், முதல்-அமைச்சர் உடல் நிலை மீது அக்கறை செலுத்துவது மாநில அரசின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைப்பதற்கு தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. மேலும், இதுபோன்ற விசாரணை நடத்தி முடிக்கும் வரை, மறைந்த முதல்வரின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எந்த ஒரு கோரிக்கையும் இதுவரை வரவில்லை.
எனவே, இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, எதிர்மனுதாரர்கள் பட்டியலில் இருந்து இரு செயலாளர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும். மனுதாரர்களுக்கு அபராதம் விதித்து, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.