சென்னை திருவல்லிக்கேணியில் மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவல்லிக்கேணி நீலம் பாட்ஷா தர்கா பகுதியைச் சேர்ந்தவர் பாதுலியா என்ற சபியுல்லா.இவர் மகன் தஸ்தகீர் (28).இவர்கள் இருவரும் சவப் பெட்டி செய்யும் தொழில் செய்து வந்தனர்.தஸ்தகீர் அண்மைக்காலமாக வேலைக்கு சரியாக செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்து வந்தார்.இதனால் அவர் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தஸ்தகீர்,வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர்,தனது தாயுடன் தகராறு செய்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பாதுலியா,மகன் தஸ்தகீரை கண்டித்தார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இப் பிரச்னை முற்றவே பாதுலியா,அங்கு இருந்த ஒரு கத்தியை எடுத்து தஸ்தகீரை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த தஸ்தகீர் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அப் பகுதி மக்கள், தஸ்தகீரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தஸ்தகீர் இறந்தார். இது குறித்து மெரீனா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பாதுலியாவை தேடி வருகின்றனர்.