தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் குழு புதிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரும்பாத, ஏற்றுகொள்ள மறுக்கிற மீத்தேன் திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் குழு எக்காரணத்துக்காக மீண்டும் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு எதற்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு அளித்திருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்வதோடு, இத்திட்டம் தொடர்பாக தமிழகத்தில் எந்த ஆய்வுப் பணியும் மேற்கொள்ள மாட்டோம் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.