வேலூர்: வேலூரில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை மையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பி.செங்குட்டுவன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு சேவை மைய தொடக்க விழாவுக்கு சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராதிகா சக்கரவர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சேவை மையத்தை திறந்து வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.செங்குட்டுவன் பேசியதாவது:
சேலத்துக்கு அடுத்தபடியாக வேலூரில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு போஸீஸ் சான்றுக்கு தபால் மூலம் அனுப்பி கிடைக்கப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் கணினி மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நரேந்திர மோடி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தபால் துறையின் மிகச் சிறந்த சேவையால் தான் பிரச்னை ஏற்படவில்லை. அதேபோல, மத்திய அரசு கொண்டு வந்த செல்வமகள் திட்டத்தில் தபால் துறை தான் அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்தது. மேலும், தபால் அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஏடிஎம் கார்டு, ரூ.500 இருப்பு வைத்தால் காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் கடவுச்சீட்டு பெற சென்னைக்கு சென்று வந்த நிலை மாறி இங்கேயே விண்ணப்பித்து மிக விரைவாக பெற ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பி.கே.அசோக்பாபு வரவேற்றார். வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பா.கார்த்திகேயன், சென்னை தபால்துறை இயக்குநர் ஏ.கோவிந்தராஜன், வேலூர் தபால் அலுவலக கண்காணிப்பாளர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.