கட்சியின் மூத்த நிர்வாகியான மா.நடராசன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி
திருப்பூர்- கோவை பகுதிகள் ஒன்றிணைந்து கோவை மாவட்டமாக இருந்த போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக பணியாற்றிய நடராசன், திங்கள்கிழமை இரவு திருப்பூர் பூலுவபட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.
திருப்பூரில் பனியன் தொழிலாளியாகவும், பின்னர் பஞ்சாலை தொழிலாளியாகவும் பணியாற்றிய, தொழிற்சங்க இயக்கத்தில் முன்னோடியாக செயல்பட்டு வந்தார். கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்திலும், ஏஐடியுசி அமைப்புகளிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு திருப்பூர் நகர மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட்டவர். 2000 முதல் 2001-ஆம் ஆண்டு வரை கட்சியின் திருப்பூர் வட்டார செயலாளராக பணியாற்றினார்.
2005 ஆம் ஆண்டு கட்சியின் கோவை மாவட்ட மாநாட்டில், மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார். 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 10 ஆண்டு காலமாக செயல்படமுடியாத நிலையில் இருந்த அவர், இப்போது மரணமடைந்து விட்டார். அவருடைய மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.