குடிமராமரத்து என்ற பெயரில் சவுடு மண் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் சவுடு மண், வளமானது என்பதால் அதை வயலில் இடும்போது, வயல்களின் வளம் அதிகரிக்கும். சவுடு மண் மீண்டும் ஏரியில் சரிந்து கொள்ளளவை குறைப்பது தடுக்கப்படும் என்ற இரட்டை நன்மைகளை கருதிதான் காலங்காலமாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இப்போது குடிமராமத்து பணிகள் நடைபெறும் ஏரிகளில் உள்ள சவுடு மண் உழவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, செங்கல் ஆலை அதிபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவுடு மண் கொள்ளை குறித்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உழவர்கள் புகார்கள் கொடுத்தாலும் கூட, மண் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு சவுடு மண் கொள்ளையைத் தடுக்கவும், நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்பட்டு பாசன ஆதாரங்கள் மேம்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.