விவசாய அமைப்புகள் சார்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 179 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கியதோ வெறும் 66.60 டி.எம்.சி.தான்.
தமிழகத்தில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானதையொட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தில்லி ஜந்தர்மந்தரில் விவசாய சங்கங்களின் தலைவர் வி. அய்யாக்கண்ணு தலைமையில் இரவு-பகல் பாராமல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 3-இல் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால், இதே நாளில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் என்றார்.