தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வியாழக்கிழமை (மார்ச் 30) சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை ராகுல்காந்தி வியாழக்கிழமை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிய உள்ளார். அவருடன் நானும் செல்கிறேன் என்றார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: முன்னதாக சு.திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்ள அதிமுக அரசு நரேந்திர மோடி அரசிடம் ரூ.39 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் கேட்டது.
ஆனால், மத்திய பாஜக அரசோ ரூ.1,748 கோடிதான் ஒதுக்கியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாள்களாக தில்லி ஜந்தர்மந்தரில் விவசாய சங்கங்களின் தலைவர் வி. அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 3-இல் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிப்பதால், இதே நாளில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும்.