ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு மே மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருந்த இடைத் தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது மூண்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 8 பேர் பலியாகினர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.
இதை கருத்தில் கொண்டு, தேர்தலை சீர்குலைக்கும் திட்டத்துடன், மிகப்பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்களில் சிலர் ஈடுபடலாம் என்று மாநில அரசு சந்தேகிக்கிறது; மாநிலத்தில் தற்போது தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்று அரசு தெரிவித்தது. இதை பரிசீலித்து, அனந்த்நாக் இடைத் தேர்தலை மே மாதம் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான தற்போதைய சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு பணிக்காக 70 ஆயிரம் துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. 30 ஆயிரம் வீரர்களை மட்டுமே தர முடியும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்ததால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.