சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைக்கும் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கும் சம்மந்தமில்லை என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் அணியின் பேச்சுவார்த்தை குழு தலைவருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மே 5-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கும் ஓபிஎஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் 8,9-ஆம் தேதிகளில் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கும் ஓபிஎஸ் அணியினர் நடவடிக்கை எடுத்து வருவதாக முனுசாமி தெரிவித்தார்.
மேலும், பேச்சுவார்த்தைக்கும் சுற்றுப்பயணத்திற்கும் எந்த சம்பந்தமில்லை. நாங்கள் நாடு, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனை விதிப்பதாக முனுசாமி தெரிவித்தார்.
அதிமுகவை இணைப்பதற்காக இரு அணிகளின் சார்பிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இரு தரப்பிலும் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் தினம் தினம் பேட்டிக்கு பேட்டி போர் மட்டுமே தினமும் நடந்துவருவதை தவிர, இரு அணிகள் இணைப்பில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.