சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற தொடங்கியுள்ளது.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற பின் இரண்டு முறை அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது மூன்றாம் முறையாக பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கியுள்ளது.
பயிர்க் கடன்களைத் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் விலக்கு, குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவை இணைப்பதற்காக இரு அணிகளின் சார்பில் குழுக்கள் அமைத்தும் முறையான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், பல்வேறு தடங்கல்கள் உள்ளன. இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தை பழனிசாமி கூட்டியிருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.