வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் விருதானது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மாநில அளவில் முன்னெடுத்துச் சென்றதை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகள் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக கடந்த 1975-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம் அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் ஆகும்.
இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை முன்னெடுத்துச் செல்லும் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோருக்கு இந்நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் விருதுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். "புதிய மாற்றங்களுக்கு வித்திட்ட முதல்வர்' என்ற விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை முன்னெடுத்துச் சென்றதை அங்கீகரிக்கும் விதத்தில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் சார்பில் சான் பிரோன்ஸிஸ்கோவில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.