சென்னை: மருத்துவர்கள் போராட்டத்தால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தைத் தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை 2 மணிநேரம் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகினர்.
2017-18 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களுக்கு பழைய விதிகளின் படியே கலந்தாய்வு நடத்த வேண்டும். 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வை தமிழக அரசே நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அரசு மருத்துவர்களின் தொடர் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வழக்குரைஞர் வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது மருத்துவர்கள் போராட்டத்தால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தைத் தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மதியம் 2.15 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணை முடிவு தெரியும் என தகவல் வெளியாகி உள்ளது.