கோவை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெறுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் 'நீட்' பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் இரண்டு சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர மறுத்தது. மேலும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதனையடுத்து நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.