ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இறகுப் பந்தாட்ட வீராங்கனையான பி.வி.சிந்து சர்வதேச பட்டியலில் மூன்றாவது இடத்தில் நிற்பவர். ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்காக முதல் வெள்ளிப் பதக்கம் பெற்று வந்தவர். இதுவரை சுமார் இருநூறு வெற்றிகளை குவித்திருப்பவர்.
இந்நிலையில், சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகையும், அமராவதியல் 1000 சதுர அடி வீடும் வழங்கி இருந்தது. இதற்கிடையே பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா ஜி.எஸ்.டி.க்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்த பிறகு பி.வி.சிந்து துணை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிந்து, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் துணை மேலாளராக பொறுப்பிலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.