சதர்லேண்ட்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாப்டிஸ்ட் தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் அமைக்கப்பட்ட முதல் பாப்டிஸ்ட் தேவலாயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
அப்போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டார். இதில் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 26 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் 5 வயது குழந்தை, பாப்டிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியார் பிராங்க் பொமரோயின் 14 வயது மகளும் அடக்கம்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காரில் இறந்து கிடந்ததை பின்னர் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர் விமானப்படை சேவையில் இருந்து நீக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 59 பேர் பலியாகினர். அந்த சம்பவம் நடந்து 5 வாரங்களில் தற்போது டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.