ரியாத்: யேமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின் பலியானார்.
சவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் இளவரசர் மன்சூர் பின் முக்ரின். அவர் 7 அரசு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.
யேமன் எல்லை அருகே அந்த ஹெலிகாப்டர் மாயமானதாக கூறப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.
இந்த விபத்தில் இளவரசர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்தவர்களின் நிலை குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக சவுதியை சேர்ந்த ஓகாஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்தில் பலியான மன்சூர் பின் முக்ரி முன்னாள் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான ஊழல் தடுப்பு கமிட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்களை கைது செய்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.