லண்டன்: பப்புவா நியூ கினியாவில் இன்று புதன்கிழமை காலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் இன்று காலை 7:26 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் விவா நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 112 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 6.5 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.