கடந்த 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில், இந்தியக் கடலோரக் காவல்படையினர், ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளம் அருகே விசைப்படகு மீனவ சங்க பிரநிதிகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, இந்தியக் கடலோர காவல் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்தனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் நடத்தி வரும் நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மீனவர்களுக்கு காவல் படை அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கியால் சுட்டதாக வந்த புகாரையடுத்து, ரப்பர் குண்டு மற்றும் படகை சோதனையிட தனுஷ்கோடியில் உள்ள தமிழ்நாடு கடலோர காவல் குழும காவல்நிலையத்திற்கு தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.