சிவகங்கையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அதிமுக தொண்டர்களின் எண்ணப்படி ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்துவோம் என்று கூறினார்.
மேலும் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்படும் வருமானவரி சோதனைக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். அதோடு வரி ஏய்ப்பவர்கள் மீது சோதனை நடத்துவது வழக்கம். ஜெயலலிதா அறையில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. சில பேர் செய்த தவறால், கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் எனக் கூறுவது தவறு, நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறார். ஆர்.கே.நகர் தொகுதி தினகரன் தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்டார்.
அவர் 10 ஆண்டுகளாக கட்சியிலே இல்லை. பின்னர் அவர் எப்படி எங்களை நியமிக்க முடியும். கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால்தான் இந்த பொறுப்புக்கு நான் வந்துள்ளேன் என்று கூறினார்.