சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதை அடுத்து வருமான வரித்துறை அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை அதிகாரிகள், வேதா இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை, சசிகலா பயன்படுத்திய அறைகளிலும் சோதனை செய்தனர்.
பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையிலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
இந்தத் திடீர் சோதனையின் காரணமாக தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் போயஸ் கார்டன் முழுவதும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த சோதனை ஜெயலலிதாவை தெய்வமாக கருதிய அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அசம்பாவிதங்கள் எதும் நிகழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.