புதுச்சேரி போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் 800க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள், ஊழியர்கள் என 650–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 5 மாதங்களாக நிதி பற்றாக்குறையால் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை. நிரந்தர ஊழியர்கள் சிலருக்கு மட்டும் சம்பளம் போடப்பட்டுள்ளது. இந்த மாதம் 18 தேதி ஆகியும் சம்பளம் வழங்காத நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஊதியம் வழங்க கோரி இன்று 2வது நாளாக 200 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு வழங்காத மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஓட்டுனர்கள் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.