தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு: அகில பாரதீய சத்ரிய மகாசபா அறிவிப்பால் பரபரப்பு

நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில அகில பாரதீய சத்ரிய மகாசபா
தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு: அகில பாரதீய சத்ரிய மகாசபா அறிவிப்பால் பரபரப்பு


பரேலி: நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில அகில பாரதீய சத்ரிய மகாசபா அறிவித்து உள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர்.

பல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்த நிலையில் அப்படத்தில் நடித்த தீபிகா படுகோனேவிற்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. ‘பத்மாவதி’  படத்துக்கு எழுந்த எதிர்ப்பால், அந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். 

இதனை பாராட்டிய அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு, தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார். 

தொடர்ந்து மிரட்டல் எழுந்துள்ளநிலையில், தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதீய சத்ரிய மகாசபா அமைப்பை சேர்ந்தவர்கள் பத்மாவதி படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது நடிகை தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தினர். 

பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர்சிங் பேசுகையில், ‘நடிகை தீபிகா படுகோனேவை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார். 

‘ராணி பத்மாவதியின் தியாகம் தீபிகாவுக்கு ஒருபோதும் தெரியாது. உயிருடன் கொளுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், இந்த பரிசை அறிவிக்கிறோம்’ என்று புவனேஸ்வர்சிங் கூறினார். இவரது பேச்சால் பரேலியில் பெரும் பதற்றம் நிலவி உள்ளது. 

புவனேஸ்வர் சிங்கின் அச்சுறுத்தும் பேச்சுக்கள் குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி ரோஹித் சிங் சஞ்சஜன் கூறுகையில், புவனேஸ்வர் சிங்கின் பேச்சு குறித்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

இதற்கிடையில், படைப்பு சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ‘பத்மாவதி’ திரைப்பட இயக்குநர் பன்சலி மற்றும் பட குழுவுக்கு ஆதரவாக திரைப்படத்துறையின் பல முன்னணி நடிகர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com