சென்னை: சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்துக்கும் நடிகை தீபிகாபடுகோனை பாதுகாக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பத்மாவதி திரைப்படத்தை இயக்குநர் பன்சாலி உருவாக்கியுள்ளார். ஆனால் இப்படத்தில் ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது ராஜபுத்திரர்களின் குற்றச்சாட்டு.
தற்போது இந்த விவகாரத்தை ஹரியானா இந்து அமைப்புகள், பாஜக போராட்டங்களை கையிலெடுத்துள்ளன. நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் பன்சாலி ஆகியோர் தலைக்கு அதிகபட்சமாக ரூ10 கோடி என உச்சகட்ட போராட்ட வெறியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து தடிசம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வேண்டிய திரைப்படம் ஏற்கனவே தயாரிப்பாளர்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்க பதிவில், தீபிகாபடுகோனை நாம் பாதுகாக்க வேண்டும். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமான தீபிகாவின் சுதந்திரத்தை நாம் மறுக்கக்கூடாது.
என்னுடைய படத்துக்கும் கூட எதிர்ப்புகள் வந்துள்ளன; வன்முறையுடன் கூடிய எந்த விவாதமுமே மோசமானது. நாங்கள் போதுமான அளவு சொல்லிவிட்டோம். இனி யோசித்து விழித்தெழ வேண்டிய தருணமிது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.