புதுவையில் தலைமைச் செயலரே கண்காணிப்பு அதிகாரியாக உள்ளதால் மத்திய கண்காணிப்பு ஆணையத்தை நாடினேன்: கிரண்பேடி விளக்கம்

 புதுவையில் தலைமைச் செயலாளரே கண்காணிப்பு அதிகாரியாக உள்ளதால் படகுகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக மத்திய கண்காணிப்பு
புதுவையில் தலைமைச் செயலரே கண்காணிப்பு அதிகாரியாக உள்ளதால் மத்திய கண்காணிப்பு ஆணையத்தை நாடினேன்: கிரண்பேடி விளக்கம்

புதுச்சேரி:  புதுவையில் தலைமைச் செயலாளரே கண்காணிப்பு அதிகாரியாக உள்ளதால் படகுகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையத்தை நாடினேன் என துணநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் சொகுசு படகுகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஆளுநர் கிரண்பேடி மத்திய கண்காணிப்பு ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். இப்புகாருக்கு பதில் அளிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் புதுச்சேரி தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் அரசில் தவறு நடைபெற்றால் முதலில் சம்பந்தப்பட்ட துறை செயலருக்கும், பின்னர் அமைச்சருக்கும், அதன்பின்னர் முதல்வருக்கும், இறுதியில் ஆளுநருக்கும் தான் செல்ல வேண்டும். ஆனால் நேரடியாக ஆளுநர் தனக்கு வந்த புகாரின் மீது விசாரணை நடத்த சிவிசிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு, விதிமீறல் என குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நிர்வாகி என்ற முறையில் நான் எனது கடமையை தான் செய்கிறேன். எதில் இருந்தும் நான் விலகிச் செல்லவில்லை என்பது முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வேறுவகையில் மாற்றப்படாமல் இருப்பதை  நான் உறுதி செய்ய வேண்டும். அத்தகையை கோப்புகளை அனுமதிக்கும்போது அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

இதை விதிகளின் கீழ் உறுதி செய்ய வேண்டியது எனது பொறுப்பு. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கென தனி கண்காணிப்பு அதிகாரி இல்லை. தலைமை செயலாளரே கண்காணிப்பு அதிகாரியாக இருந்து முதல்வருக்கும் பதில்தர வேண்டியுளளது. அவரால் தனித்து இயங்க முடியாது. எனவே தான் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி உள்பட பல்வேறு விஷயங்களுக்காக சிவிசி, சிபிஐ போன்ற அமைப்புகளை நாட வேண்டி இருந்தது.

தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கான நிதியை பாட்கோ உயர்மின்கோபுர விளக்குகள் அமைத்து வீணடித்துள்ளது. இதற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு இந்த முறைகேடு குறித்தும், அதனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் கடிதம் எழுத நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். ஏற்கனவே வாய்மொழியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவரிடம் கூறியுள்ளேன்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் நேர்மையை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. நான் முதல்வரின் ஒத்துழைப்பையே எதிர்பார்க்கின்றேன். விரோதம் மற்றும் எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. தாழ்த்தப்பட்டோர் திட்ட நிதியை செலவிட்டது தொடர்பாகவும் சிவிசிக்கு விசாரிக்க எழுதியுள்ளேன். அனைத்து செயல்களும் எனது அதிகார வரம்புக்குட்பட்டே மேற்கொள்கிறேன் என்றார் கிரண்பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com