சென்னை: தமிழக அரசுக்கே டெங்கு வந்துவிட்ட பின்னால், அந்த அரசு இனி எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும் என்று அ.தி.மு.க அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது
அதிவேகத்துடன் பரவி விலைமதிப்பில்லாத மனித உயிரை காவுவாங்கும் டெங்கு என்னும் கொடிய நோயை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் செயல்பட வேண்டிய தருணம் இது. ஜெயலலிதாவால் மக்கள் நல்வாழ்விலும், சுகாதாரத்திலும் என்றும் முதன்மையாக நின்ற தமிழகத்தில் டெங்கு பரவி படர்ந்து தொடர்ந்து மக்கள் உயிர்களை பலிவாங்குகிறது.
டெங்கு உயிரிழப்புகள் தொடரும் நிலையில் இனி தமிழக அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொண்டர்கள் ஈடுபட வேண்டும். எந்த தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ஜெயலலிதா உழைத்தாரோ அந்த நோக்கத்தை அவரின் பிள்ளைகளாகிய நாம் நிறைவேற்றிட வேண்டும்.
டெங்கு ஒழிப்பை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். மக்களை காவு வாங்குகின்ற இந்த கொடிய டெங்கு நோய் மேலும் பரவாமல் தடுக்கின்ற பெரும் முயற்சியில் நாம் பணியாற்றிட வேண்டும். நோயை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை,அரசு செயல்படாமல் உள்ளது என்று கூறினார்.