குஜராத்: நாட்டின் செல்வச் செழுமைக்கு நுழைவாயில்களாக துறைமுகங்கள் விளங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குஜராத் மாநிலத்தில் கோகா நகருக்கும், தாஹெச் நகருக்கும் இடையே 615 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதற்கட்ட படகு போக்குவரத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கிவைத்தார். பின்னர், டஹேஜ்ஜில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
‘நாட்டின் செல்வச் செழுமைக்கான நுழைவாயில்களாக துறைமுகங்கள் விளங்கி வருவதாக தெரிவித்த நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் அதிக துறைமுகங்கள் தேவைப்படுவதாகவும், உருவாக்குவது அவசியம் என குறிப்பிட்டார். மேலும் பழைய துறைமுகங்களை மேம்படுத்துகின்ற சாகர்மாலா திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பழைய துறைமுகங்கள் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
வெளிநாடுகளில் 30 சதவீதம் போக்குவரத்து நீர்வழிகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கடலோர பகுதியிலும், 14 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு ஆற்றுப் பகுதியிலும் நீர்வழித்தடங்கள் நடைபெறுகிறது. நமது நாட்டில் 21 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு நீர்வழித்தடங்கள் உள்ளன. இயற்கையாகவே ஆசிர்வதிக்கப்பட்ட இந்தியாவில் இது வெறும் ஐந்து சதவீதமாகும்.
ஆனால், ஆறு நீர்வழிகள் போக்குவரத்து மட்டுமே இருந்த முந்தைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில், நீர்வழிகள் போக்குவரத்துக்கு எந்தவொரு முக்கியத்துவதையும் வழங்கவில்லை. அதைப்பற்றி எதுவும் சிந்தக்கவோ, செயல்படவோ இல்லை என்றவர் தற்போது எங்கள் ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நீர்வழி போக்குவரத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மோடி கூறினார்.
ஒரு டன் சரக்குகளை சாலைகள் வழியாக அனுப்ப ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1.50 காசுகள் செலவாகின்றது. இதே சரக்கை ரயில் மூலம் அனுப்ப ஒரு ரூபாய் ஆகும். ஆனால், நீர்வழிகளின் முக்கியத்துவத்தை உயர்த்தும் வகையில், நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் வெறும் 20 காசு செலவில் அனுப்பலாம் என தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு துறைமுகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் அவற்றின் தரத்தை அதிநவீனப்படுத்த வேண்டும். அவற்றின் மூலம் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என பிரதமர் மோடி கூறினார்.
துறைமுகங்களை நாட்டின் வளத்திற்கான கருவிதளாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும், நவீனப்படுத்துவதற்கான புதிய தாரக மந்திரத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அரபிக் கடலை ஒட்டிய நகரங்களையும், வங்காள விரிகுடா கடலை ஒட்டிய நகரங்களையும் இணைக்கும் சாகர் மாலா திட்டம் குறித்து குறிப்பிட்ட நரேந்திர மோடி, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தில் இன்றுடன் 3-வது முறையாக குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.