அகமதாபாத்: தில்லியில் இருந்து மும்பைக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் "பாதுகாப்பு காரணங்களுக்காக" அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பைக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.
தில்லியில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 9ர339 என்ற விமானம் இன்று அதிகாலை 2.55 மணியளவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக "பாதுகாப்பு காரணங்களை" மேற்கோளிட்டு அவசரமாக அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்ட விமானம் அங்குள்ள விமான நிலையத்தில் 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
விமான பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். விமானத்திற்கு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி அழைப்பின் பேரில் விமானம் தரையிறக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர்கள் இந்த விவகாரம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை.