மும்பை: மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
நிதி தலைநகரமான மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை பெண்டி பஜாரில் உள்ள 117 ஆண்டு பழமை வாய்ந்த 5 அடுக்குமாடி கட்டடம் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழன்தனர். கட்டட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் 37 பேர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மழையின் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று வரை 27 -ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று 34-ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 25 ஆண்கள், 9 பெண்கள் அடக்கம். 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மும்பையில் கனமழைக்கு 5 பேர் பலியான நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 34 பேர் உயிரிழந்தது அந்நகர மக்களை கவலை அடைய செய்துள்ளது.
இடிந்து விழுந்த 5 அடுக்குமாடி கட்டிடத்தில் 9 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. மேலும் அந்த கட்டிடத்தில் ஒரு ப்ளே ஸ்கூலும் செயல்பட்டு வந்துள்ளது. கட்டிட விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.