அரசியல் சண்டைக்கு நீதிமன்றத்தை பயன்படுத்தாதீா்கள்: உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தல்
மதுரை: நாகா்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை அரசியல் சண்டைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று உயா்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
நாகர்கோவில் வடசேரியில் நெடுஞ்சாலையின் நடுவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மணல் சிற்பம் சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதை அகற்ற வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மணல் சிற்பம் அமைந்துள்ள அதே பகுதியில் தான் அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு அருகிலேயே உள்ளது. ஜெயலலிதாவின் சிற்பத்தை அகற்றக்கோரும் மகேஷ்தான் அண்ணா சிலையை பராமரித்து வருகிறார். இதனால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லை. எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு மீதான தீர்ப்பை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் அதிருப்தி அடைந்த நீதிபதி, மனுதாரா் பொது நல வழக்கு தொடா்ந்திருந்தால் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.
இது அரசியல் நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உங்கள் அரசியல் சண்டைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது உயா்நீதிமன்ற மதுரைக்கிளை.